கோவை: கோவை சல்வன் வீதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி மாணவரின் R15 பைக்கை, நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சல்வன் வீதி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர், தனது செலவுகளுக்காக பகுதி நேர வேலையும் செய்து வருகிறார்.
சுமார் 9 மாதங்களுக்கு முன்பு தனது சேமிப்புப் பணத்துடன், மாதத் தவணை முறையில் புதிய R15 இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். தொடர்ந்து EMI செலுத்தி பைக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், சல்வன் வீதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை நோட்டமிட்டுள்ளனர்.
VIDEO
அப்போது ஹரிஷின் R15 பைக்கை குறிவைத்த அவர்கள், அதன் பூட்டை உடைத்து சில நிமிடங்களிலேயே பைக்கை எடுத்துச் சென்றுள்ளனர். யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சாவகாசமாக பைக்கை ஓட்டிச் சென்று தப்பியுள்ளனர்.
காலையில் எழுந்து பார்த்த ஹரிஷ், தனது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இருவர் பைக்கின் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஹரிஷ் அளித்த புகாரின் பேரில் வெரைட்டி ஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடும் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.





