கோவை: கோவையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் கல்லூரியில் இஞ்சினியரிங் படித்து வரும் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் உடையார். இவரது மகன் ரோஷன் (வயது 20). இவர் கோவை அருகே உள்ள கே.ஜி. சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு மெக்கானிக் இன்ஜினியரிங் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்ததும் மாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பாலக்காடுக்கு செல்ல புறப்பட்டுள்ளார். இவர் சேலம்-கொச்சின் எல்.என்.டி .பைபாஸ் புறவழிச்சாலையயின் தேன்பண்ணை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, கொச்சியில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரோஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று மாலை 5:30 மணிக்கு நடந்துள்ள நிலையில், மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நயினார் நாகேந்திரன்
இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான மாணவர் ரோஷன் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின் உறவினர் என்று கூறப்படுகிறது.
மாணவன் இறந்த தகவல் அறிந்ததும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விபத்து நடந்த பகுதி அடிக்கடி உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் பகுதி என்று கூறப்படுகிறது.
நேற்றும் மதுக்கரை அறிவொழி நகர் அருகே கல்லூரி மாணவி இதே போல் ஆட்டோ மீது லாரி மோதி உயிரிழந்தார், அது பாதுகப்பற்ற பகுதி என்று அப்பகுதி மக்கள் போரட்டதில் ஈடுபட்ட நிலையில், இன்றும் எல்&டி பைபாஸ் சாலையில் மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற விபத்துப் பகுதிகளை அரசு கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





