கோவை: ஆந்திராவில் இருந்து கோவை வந்த நபரிடம் ரூ.1 கோடியே 6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உளுந்தூர்பேட்டை அருகே பிடிபட்ட 4 பேரை கோவைக்கு அழைத்து வந்த போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாமம் ரங்கசாமி (66) என்பவர் ஹைதராபாத்தில் இருந்து நேற்று பேருந்து மூலம் கோவை வந்துள்ளார். தங்கம் வாங்குவதற்காக கோவை வந்ததாக கூறப்படும் நிலையில், லட்சுமி மில்ஸ் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியபோது, அவரது கைப்பையில் இருந்த ரூ.1 கோடியே 6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரங்கசாமி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளை உடனடியாக உஷார்படுத்தினர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சந்தேகத்திற்குரிய நபர்கள் காரில் கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி, உளுந்தூர்பேட்டை அருகே காரில் சென்ற 4 பேரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை கோவைக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணம் எங்கே?
பிடிபட்ட 4 பேரிடம் இருந்து இதுவரை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் பணம் கைப்பற்றப்படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், பணத்தை வேறு யாரிடமாவது கொடுத்தார்களா? ரங்கசாமியை எவ்வாறு கண்காணித்தனர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், ரங்கசாமி தங்கம் வாங்குவதற்காகவே இந்தப் பணத்தை கொண்டு வந்தாரா? எந்த நகைக்கடையில் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தார்? கைப்பையில் இவ்வளவு பெரிய தொகை இருப்பது மற்றவர்களுக்கு எவ்வாறு தெரியவந்தது? என்பது குறித்தும் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய நபர் யார்?
பிடிபட்ட 4 பேரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை இயக்கியது யார்? கொள்ளை சம்பவத்திற்கு பின்னால் வேறு நபர்கள் உள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் பேருந்தில் வந்து இறங்கிய நபரிடம் ரூ.1 கோடியே 6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவமும், அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் உளுந்தூர்பேட்டை அருகே 4 பேர் போலீசாரிடம் சிக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மீட்கப்படுமா? சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது போலீஸ் விசாரணையின் முடிவில் தெரியவரும்.





