கோவை : கோவை சிங்காநல்லூரில் முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் லஞ்சம் பெற்றதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாகவும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இன்று காலை 6 மணியளவில் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் சோதனையை தொடங்கினர்.
சென்னை அடையாறு, திருவான்மியூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள், கோவை உள்ளிட்ட இடங்களில் முதற்கட்டமாக 10 இடங்களில் சோதனை தொடங்கியது. தொடர்ந்து இந்த சோதனை மாநிலம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை திருச்சி சாலை, சிங்காநல்லூர் அருகே உள்ள பிரபல டி.வி.எச். அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள கே.என்.ரவிச்சந்திரனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பத்துக்கும் மேற்பட்ட போலீசார் குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தியுள்ள இந்த திடீர் சோதனையால் கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





