கோவை: தடாகம் சாலையில் உள்ள வளர்ப்புப் பிராணிகள் விற்பனை நிலையத்தில் (Pet Shop) மர்ம நபர்கள் இருவர் புகுந்து, ரூ.20,000 மதிப்பிலான நாய் மற்றும் பூனையை நைஸாகத் திருடிச் செல்லும் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவை, தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் பெட் ஷாப் ஒன்றிற்கு பிற்பகல் வேளையில் இரண்டு வாலிபர்கள் வந்துள்ளனர். கடையில் உரிமையாளரின் கவனம் குறைந்த நேரத்தைப் பயன்படுத்திய அந்த நபர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.15,000 மதிப்புள்ள நாய் மற்றும் ரூ.5,000 மதிப்புள்ள பூனை ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
வாலிபர்கள் இருவரும் வளர்ப்புப் பிராணிகளைத் தூக்கிக் கொண்டு நைஸாக நழுவும் காட்சிகள், கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் இதுவரை எந்தவிதப் புகாரும் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள கடை உரிமையாளர், “காவல்துறை வழக்கு, விசாரணை எதுவும் எனக்கு வேண்டாம். திருடிச் செல்லப்பட்ட எனது செல்ல நாய் மற்றும் பூனை பத்திரமாகக் கிடைத்தால் மட்டுமே போதும்” என உருக்கமான பதிவொன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
உரிமையாளரின் இந்த உருக்கமான வேண்டுகோளைத் தொடர்ந்து, அந்த சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Also Read: Coimbatore Weather Report: கோவையில் இந்த வாரம் 3 நாட்கள் மழை… எப்போது?
கடை உரிமையாளரின் பதிவில், திருடிச் செல்லப்பட்ட செல்லப் பிராணிகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாகத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதே தனது ஒரே விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்
சமூக வலைதளங்களில் வைரல்
மேலும், இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்த சமூக வலைதள பயனர்கள், சம்பந்தப்பட்ட இருவரையும் கண்டுபிடிக்க உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாய் மற்றும் பூனையை திருடிச் சென்ற நபர்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக கடை உரிமையாளருக்கு தெரிவிக்கவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வீடியோ காட்சிகள்
வளர்ப்புப் பிராணிகள் வெறும் பொருட்கள் அல்ல; குடும்ப உறுப்பினர்களைப் போல அன்புடன் வளர்க்கப்படுபவை என்பதால், அவற்றை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது. இந்த நிலையில், கோவை பெட் ஷாப்பில் நடந்த இந்த நூதன திருட்டின் சி.சி.டி.வி காட்சிகள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.





