கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலியாக உள்ள தனியார் நிலங்களை முறையாக பராமரிக்காத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சில தனியார் காலியிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும், சில இடங்களில் பொதுமக்கள் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம், கொசு உற்பத்தி உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
இதையடுத்து, காலியிட உரிமையாளர்கள் தங்களது நிலங்களில் தேங்கியுள்ள குப்பைகள், கழிவுகள் மற்றும் புதர்களை உடனடியாக அகற்றி, தூய்மையாக பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் காலியிடங்களின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மூலம் அறிவிப்பு வழங்கப்படும். அந்த அறிவிப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள், உரிமையாளர்கள் தங்களது சொந்த செலவில் காலியிடத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படாவிட்டால், மாநகராட்சி சார்பில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு, நிலம் தூய்மைப்படுத்தப்படும். இதற்கான செலவு உரிமையாளர்களிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சியின் நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் காலியிட உரிமையாளர்கள் தங்களது நிலங்களை உடனடியாக சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொதுமக்கள் காலியிடங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து, தூய்மை பணிகளுக்கு மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





