கோவை: கோவையில் தாத்தாவை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மசகௌண்டன் செட்டிபாளையம், பொன்னேகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த பழனி (65) என்பவர் தனியாக வசித்து வந்தார்.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி இரவு, நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா, ஹள்ளிமொயார் பகுதியைச் சேர்ந்த அவரது பேரன் பூபதி (20) தாத்தா வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது, பூபதியின் தாயார் குறித்து பழனி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பூபதி மரக்கட்டையால் பழனியை தாக்கியதுடன், தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பழனி அருகில் இருந்த கல்லில் தலை மோதி பலத்த காயமடைந்தார்.
சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பழனியை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உயிரிழப்பு
இதுகுறித்து பழனியின் மற்றொரு பேரனான மகேந்திரன் (30) அளித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பழனி, கடந்த ஜூன் 2-ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலைக்கு ஒப்பான குற்றமாக மாற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய பூபதியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


