கோவை: காவலர்கள் லஞ்சம் பெற்றால் புகார் அளிக்க தொடர்பு எண்ணை மாநகர காவல் ஆணையர் கண்ணன் அறிவித்துள்ளார்.
மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் யாரேனும் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டால் அதைப்பற்றிய புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, மாநகர காவல் ஆணையர் கண்ணன். உத்தரவின்பேரில் “விஜிலென்ஸ் செல் (Vigilance Cell)” என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது
இப்பிரிவின் மூலம், கோவை மாநகர காவல் துறையில் கிடைக்கப்பெறும் காவல் அதிகாரிகள்/ஆளிநர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் தொடர்பான அறிக்கைகள் கோவை மாநகர காவல் ஆணையருக்கு நேரடியாக சமர்ப்பிக்கப்படும்.
மேலும், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் ஊழல் தொடர்பான தகவல்கள் அல்லது புகார்களை தெரிவிக்கும் வகையில், கோவை மாநகர காவல் விஜிலென்ஸ் செல் தொடர்பு எண்: 8148919100 என்ற தொலைபேசி எண் அனைத்து காவல் நிலையங்கள், சிறப்புப் பிரிவுகள் மற்றும் காவல் சரகங்களில் முக்கியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஊழல்/லஞ்சம் இல்லாத காவல்துறையை உருவாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஊழல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை மேற்கண்ட தொடர்பு எண்ணில் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோவை மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.





