கோவை: சிங்காநல்லூரில் இருந்து காந்திபுரம் நோக்கி இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தில் ஏற முயன்ற இளம்பெண் கீழே விழுந்து காயமடைந்ததாகவும், அவரிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
கோவையில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் 88-ம் எண் அரசு நகரப் பேருந்து சிங்காநல்லூரில் இருந்து காந்திபுரம் வரை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை நவஇந்தியா பகுதியில் சில பெண்கள் பேருந்தில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்து நடத்துனர் பெண்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும், பெண்கள் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தபோதே பேருந்தை இயக்குமாறு ஓட்டுநரிடம் கூறியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், படிக்கட்டில் ஏறிய இளம்பெண் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Also Read: “நீ வேறு சாதி… நான் வேறு சாதி” – கணவர் குடும்பத்தினர் மீது புதுப்பெண் பரபரப்பு புகார்!
சம்பவத்தை பார்த்தும் பேருந்தை நிறுத்தி இளம்பெண்ணுக்கு உதவாமல், ஓட்டுநரும் நடத்துனரும் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பேசியதாகவும், தொடர்ந்து பேருந்தை இயக்கிச் சென்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நடத்துனர் தனது பெயரை தெரிவித்துவிட்டு, “என்ன முடியுமோ செய்து கொள்ளுங்கள்” என கூறியதாகவும் பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு பேருந்து பணியாளர்களே இவ்வாறு அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உண்மை எனில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.





