கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் சிபிஐ சார்பில் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பல்வேறு பொதுநல பிரச்சனைகள் குறித்தும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள நிலவும் பிரச்சனைகள் குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் பாண்டியாறு, புன்னம்புலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ஆனைமலை நல்லாறு பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,ப்கோவை மெட்ரோ திட்டத்திற்கு காலம் தாழ்த்தக்கூடாது, நீலாம்பூர்& மதுக்கரை வரை உள்ள இரண்டு வழி சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவு படுத்த வேண்டும்
கோவையை தலைமை இடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வனவிலங்கு மோதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தனியார் பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் கல்வி கட்டணம் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், கோவை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் நிர்வாகி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,
கோவை வடகோவை ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் கோவையில் உயர் நீதிமன்ற கிளை மற்றும் புதிய நீதிமன்ற கட்டிடம் அமைக்க வேண்டும், மதுக்கரை மரப்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் சாலைமளை விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும், சின்னவேடம்பட்டி ஏரி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஏரிக்கோல் கழிவுநீர் விடும் திட்டத்தை கைவிட வேண்டும், மாநகராட்சி விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.வீரபாண்டியன், கோவை நகரின் முதன்மை குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி மற்றும் பிள்ளூர் அணைகளை உடனடியாகத் தூர்வாரி, குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். கொங்கு மண்டலத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாயத்தை மேம்படுத்தவும் நீண்டகாலமாகக் கிடப்பில் உள்ள பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தையும், ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலம்பூர் முதல் மதுக்கரை வரையிலான சாலையை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும். தொழில் நகரமான கோவைக்குத் தனி ரயில்வே கோட்டம் அமைக்கப்பட வேண்டும். அப்பகுதி மக்களின் சட்டப் போராட்டங்களை எளிதாக்க கோவையில் சென்னை உயர் நீதிமன்றக் கிளையை நிறுவ வேண்டும். தமிழக மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும்பங்களிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகளும் கூடுதல் முன்னுரிமையும் வழங்க வேண்டும் என்றார்.
கோவையில் சமீபநாட்களில் கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று என்றும் இது போன்ற சம்பவங்கள் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வலுமைக்கு எதிரானவை என்றும் வெறும் காவல்துறை நடவடிக்கை மட்டுமன்றி, சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூர்வமான கல்வியின் மூலமே போதை அரக்கனை ஒழிக்க முடியும் அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எல்லையோர துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும்
தமிழக-கர்நாடக எல்லையில் மாடு மேய்க்கச் சென்ற பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் எல்லையோரப் பகுதிகளில் வாழும் ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக எல்லைகளைக் கடப்பது இயல்பான ஒன்று என்றும் அவர்களைப் பயங்கரவாதிகளைப் போலச் சுட்டுக் கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத படுகொலை என்றார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், எல்லையோர மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமும் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
காவேரி, மேகதாது மற்றும் எல்லைப் பிரச்சினைகளின் போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், மதவாத மற்றும் வகுப்புவாத சக்திகளை வீழ்த்தவுமே சிபிஐ உறுதியோடு செயல்படுவதாகத் தெரிவித்தார். வெளியிலிருந்து ஆதரவு அளித்தாலும், மக்கள் நலனுக்கு மாறான செயல்கள் அல்லது வாக்குறுதி மீறல்கள் நடக்கும்போது எங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தொடர்ந்து பதிவு செய்வோம் எனத் தெரிவித்தார்.





