கோவை: கோவை சரவணம்பட்டி அருகே மினி லாரி டிரைவர் ஒருவர், லாரியின் டிரைவர் இருக்கையில் சாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கீழக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (53). டிரைவரான இவர், கோவை சரவணம்பட்டி அருகே சிவராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு ராஜு மினி லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், மறுநாள் காலை சரவணம்பட்டி அருகே விநாயகபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே ராஜுவின் மினி லாரி நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ராஜு லாரியின் டிரைவர் இருக்கையில் சாய்ந்த நிலையில் இருந்துள்ளார். அவரிடம் எந்த அசைவும் இல்லாததை தொடர்ந்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ராஜுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜுவின் மகன் ஹரிஹரன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜுவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.





