கோவை: கோவை கண்ணப்ப நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சிக் கொடியுடன் காரில் வந்த நான்கு இளைஞர்கள், மது அருந்திவிட்டு தள்ளுவண்டி வியாபாரியின் வண்டியில் கார் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள “தென்றல் மணமகிழ் மன்றம்” என்ற மதுபானக் கூடத்திற்கு தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சிக் கொடி பொருத்தப்பட்ட காரில் நான்கு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களது காரை, அப்பகுதியில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே நிறுத்திவிட்டு மதுபானக் கூடத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் இரவு நேரத்தில், மது அருந்திவிட்டு காரை எடுக்க வந்தபோது, காரின் முன்புறத்தில் வழக்கம்போல் பானிபூரி விற்பனையில் ஈடுபட்டிருந்த கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் தள்ளுவண்டி இருந்துள்ளது.
இதையடுத்து, எந்தவித முன்னறிவிப்போ அல்லது பேச்சுவார்த்தையோ இல்லாமல் காரை இயக்கியதாகவும், அது தள்ளுவண்டியில் மோதியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட லட்சுமணன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காரில் இருந்த நான்கு பேரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பொதுமக்களிடமும் அந்த நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க பொதுமக்கள் முயன்ற நிலையில், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி அருகிலிருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
video
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தள்ளுவண்டி வியாபாரிக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றும், தவெக கொடியுடன் வந்த இளைஞர்களுக்கு காவல்துறையினர் ஆதரவாக செயல்பட்டதாகவும் சில பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவத்தின் போது அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.





