கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதிக்கு இன்று முதல் அரசு பேருந்து எண் 104 சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பேருந்து வசதி கோரி வந்த சுமார் 1,800 குடும்பங்களின் நீண்டகால கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதிக்கு இன்று முதல் அரசு பேருந்து எண் 104 இயக்கப்படுவதால், பல ஆண்டுகளாக பேருந்து வசதி கோரி வந்த மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியுள்ளது.
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதியில் சுமார் 1,800 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியோர் மற்றும் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக சிரமங்களை சந்தித்து வந்தனர்.
Also Read: மதுபோதை மோதல் உயிரிழப்பில் முடிந்தது… பீகார் தொழிலாளி பலி!
இந்த பிரச்சினை தொடர்பாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்து சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தார்.
இதன் விளைவாக, இன்று முதல் அரசு பேருந்து எண் 104 சேவை குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதிவரை சுமார் 3 கிலோமீட்டர் நீட்டிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதன் மூலம் 1,800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக பயனடைய உள்ளன.
Also read: கோவையில் பசியால் தவிக்கும் மான்கள்… குப்பை மேட்டில் உணவு தேடும் சோகம்!
இந்த நடவடிக்கை மக்களின் அன்றாடப் பயணம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளை எளிதாக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பேருந்து சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து டாக்டர் கனிமொழி சந்தோஷ் கூறுகையில், “மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதே உண்மையான மக்கள் அரசியல். கவுண்டம்பாளையம் தொகுதியில் மக்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்களின் நம்பிக்கையை செயல்பாட்டின் மூலம் தொடர்ந்து காப்போம்” என்றார்.





