கோவை: கோவையின் நியூ சித்தாபுதூரில் வீட்டின் வாசலில் போதையில் உறங்கிக் கிடந்த மர்ம நபரால், தாய் மற்றும் அவரது இரு மகள்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அச்சத்தில் வெளியே காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையின் நியூ சித்தாபுதூர் பகுதியில் வீட்டு வாசலில் போதையில் உறங்கிக் கிடந்த மர்ம நபரால், தாய் மற்றும் அவரது இரு மகள்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீட்டிற்குள் செல்ல முடியாமல் வெளியே காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான செல்போன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை நியூ சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சிவசங்கரி என்பவர் தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு, நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் அவர்கள் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே சென்ற அவர்கள், வீட்டின் பிரதான கதவு முன்பாக அடையாளம் தெரியாத ஒருவர் போதையில் உறங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த நபரை எழுப்ப முயன்றால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில், அவர்கள் வீட்டிற்குள் செல்லாமல் வெளியிலேயே காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாய் மற்றும் அவரது இரு மகள்களும் அச்சத்துடன் வெளியே காத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கு பலமுறை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் உடனடி பதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பின்னர் முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் பெண்களுக்கான உதவி எண் 181 ஆகியவற்றுக்கும் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் சென்றதை அடுத்து, அங்கு வந்த காவலர் சம்பவ இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி விசாரணை நடத்தினார்.
வீடியோ
அப்போது அவர் கடும் போதையில் இருந்ததாகவும், தன்னுடைய பெயர் மற்றும் முகவரி குறித்து தெளிவாக பதிலளிக்க முடியாமல் தள்ளாடியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபரை அங்கிருந்து வெளியேறுமாறு காவலர் எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். காவலர் போதையில் இருந்த நபரை எழுப்பி அனுப்பும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


