கோவை: கோவை வடவள்ளி பகுதியில் குட்டிகளுடன் கூட்டமாக சுற்றித் திரியும் காட்டுப்பன்றிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான வடவள்ளியில், காட்டுப்பன்றிகள் தங்களது குட்டிகளுடன் கூட்டமாக சாலைகளில் சுற்றித் திரிவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடவள்ளியில் இருந்து சீரநாயக்கன்பாளையம் செல்லும் பிரதான சாலைகளில், குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் உணவு தேடி கூட்டமாகச் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read: கைவினைஞர்களுக்கு நிதியுதவி.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளைத் தேடி வரும் இந்த பன்றிகள், குட்டிகளுடன் சாலையைக் கடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில், யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து நீண்ட தூரம் பயணித்து மாநகர எல்லைக்குள் புகுந்த காட்டு யானைகள் சரவணம்பட்டி பகுதியில் சுற்றித் திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவற்றை வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இந்நிலையில், தற்போது வடவள்ளி பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக குட்டிகளுடன் வரும் காட்டுப்பன்றிகள் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
எனவே, பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பே வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், முந்தைய அரசின் அறிவிப்பின்படி வன எல்லைகளைத் தாண்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுட்டுப் பிடிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் இரும்பு கூண்டுகள் அமைத்து அவற்றைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வடவள்ளி பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



