கோவை: கோவையில் 3 மாதங்களுக்கு சமரச தீர்வு முகாம் நடைபெற உள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் மூலம் தீர்த்து வைப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசத்திற்கான சமரசம் 3.0 என்ற தலைப்பில் முகாம் நடைபெற உள்ளது.
அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை நாடு தழுவிய சமரச தீர்வு முகாம் அந்தந்த மாவட்ட சமரச தீர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதனால், தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்ரீதேவி வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட சமரச தீர்வு மையங்களிலும் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அந்தந்த நீதிமன்றங்களில் உள்ள சமரச தீர்வு மையங்களில் சமரச தீர்வுக்கான முகாம் நடைபெற உள்ளது.
இதனால் வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்ளலாம். நேரமும், செலவும் மிச்சமாகும். ரகசியம் பாதுகாக்கப்படும். இருதரப்பினர்களிடையே வெற்றி ஏற்படும் மற்றும் பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய தீர்வை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எனவே, சமரசத்தின் மூலம் தீர்வு காணக்கூடிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி (மாவட்ட சமரசத் தீர்வு மையம்) முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்ரீதேவி தெரிவித்து கொண்டுள்ளார்..




