கோவை: காதலனின் நீண்ட நாள் கனவான KTM பைக்கை வாங்கிக் கொடுப்பதற்காக தோழியின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடி, அவற்றை ரூ.2.50 லட்சத்திற்கு விற்றதாகக் கூறப்படும் கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாய் பிரின்சி (19). இவர் பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம். சி.ஏ. படித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி ஊஞ்சவேலம்பட்டி அருகே உள்ள தனது தோழியின் வீட்டிற்கு ஜாய் பிரின்சி சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் தங்கச் சங்கிலி, 3 சவரன் மதிப்புள்ள 2 வளையல்கள் மற்றும் 3 சவரன் மதிப்புள்ள 4 தோடுகள் என மொத்தம் 9 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்ச்செல்வன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஜாய் பிரின்சி திருடியதாகக் கூறப்படும் நகைகளை பொள்ளாச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.2.50 லட்சத்திற்கு விற்றதாகவும், அந்தப் பணத்தில் தனது காதலனுக்காக விலை உயர்ந்த KTM இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காதலனின் நீண்ட நாள் கனவாக இருந்த KTM பைக்கை அவருக்கு ‘சர்ப்ரைஸ்’ ஆக பரிசளித்ததாகவும், அந்த தருணத்தை வீடியோவாக பதிவு செய்து Instagram Reels-ல் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஜாய் பிரின்சி தனது Instagram பக்கத்தில் ‘falkonz’ என்ற அடையாளத்துடன் காதல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது காதலனுடன் பகிர்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில், ஜாய் பிரின்சி மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது காதலன் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதையடுத்து ஜாய் பிரின்சி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
காதலனுக்காக 9 பவுன் நகைகளை திருடி, அதில் கிடைத்த பணத்தில் அவரது கனவு KTM பைக்கை வாங்கிக் கொடுத்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





