கோவை: கோவை சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மத்திய சிறையில் 2,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் தனித்தனி பிளாக்குகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 29-வது பிளாக் பகுதியில் கைதிகள் ஆனந்த், ஜெயமணி உள்ளிட்ட 3 பேர் நேற்று நின்று கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கைதி தனது வழக்கறிஞருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த மூன்று கைதிகளும் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்பது போல் அருகில் நின்று கவனித்துக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த காவலர், அந்த மூன்று கைதிகளையும் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
உடனே அந்த காவலரை ஜெயமணி, ஆனந்த் உள்ளிட்டவர்கள் மரியாதைக் குறைவாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த காவலர் சிறைக் கண்காணிப்பாளர் தாமரைக்கணியிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அவர் வந்து விசாரணை நடத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று கைதிகளும் சேர்ந்து நேற்று சிறைக் காவலர் வெள்ளைப்பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக மற்ற காவலர்கள் விரைந்து வந்து அவரை மீட்டனர். மேலும், அவரை தாக்கிய கைதிகளை அப்புறப்படுத்தினர். காயமடைந்த சிறைக் காவலர் வெள்ளைப்பாண்டி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கோவை மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் மூன்று கைதிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மூன்று பேரையும் வேறு சிறைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சூலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான நபரை மற்ற கைதிகள் சரமாரியாக தாக்கினர். அதற்கு முன்பு ஒரு காவலரை தகரம் கொண்டு தாக்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.
தற்போது சிறைக் காவலர்கள் தாக்கப்பட்டிருப்பது மூன்றாவது சம்பவமாகும். கோவை சிறையில் கைதிகளின் தாக்குதல்களை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


