கோவை: கவுண்டபாளையம் பகுதி மக்கள் துணி கழிவுகளை இனி தூய்மை பணியாளர்கள் அல்லது களப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும்
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC)வார்டு எண்.33க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதிகளிலுள்ள பொதுமக்கள். தங்களது துணிக் கழிவுகளை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பரீட்சார்த்த முறையில் துணிக் கழிவுகள் சேகரிப்பு “மறு நெசவு” பிரச்சாரத்தினை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தொடங்கி வைத்தார்.
கவுண்டம்பாளையம் பகுதிகளில் கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.33-க்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுமார் 80க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு. துணிக் கழிவுகள் சேகரிப்பு “மறு நெசவு” பணிக்கான பைகளை மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பிரச்சார வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது, கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்கள் வீடுகளில் சேகாரமாகும். தேவையற்ற துணிக் கழிவுகளை கொட்டுவதையும் மற்றும் எரிப்பதையும் தவிர்க்கும் பொருட்டு, பிரதி வாரம் புதன்கிழமைகளில், தங்களது வார்டு பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

இதனால் துணிக்கழிவுகளை மறுசுழற்சி செய்து, பொருளாதாரத்தை சீரமைப்பதற்காகவும், இயற்கை வளங்களை பாதுகாத்து, சுற்றுச்சூழலை காக்க முடியும்.
மேலும், பயன்படுத்தக்கூடிய பழைய ஆடைகள் மற்றும் துணிகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள் திரைச்சீலைகள், துண்டுகள் உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள்கிழிந்த அல்லது பயன்படுத்த முடியாத துணித்துண்டுகள் ஆகியவற்றை வழங்கலாம். இதனால் துணிக்கழிவுகளை குறைத்து இயற்கை வளங்களை மற்றும் பூமியை பாதுகாக்க முடியும். மேலும், இப்பணியானது, மேற்கு மண்டலத்தை தொடர்ந்து மற்ற மண்டல பகுதிகளிலும் படிப்படியாக தொடங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் வரக்கூடிய குப்பைகளில் துணிக்கழிவுகளும் வருகிறது. துணிக்கழிவுகளைன மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளில் சேர்க்க இயலாது.
எனவே அவற்றினை தனியாக தரம் பிரித்து, மறுசுழற்சி செய்து, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில், மாற்றுவதற்கான முன்னெடுப்பை, முதற்கட்டமாக மேற்கு மண்டலத்தில் செயல்படுத்தும் விதமாக இன்று துவங்கி இருக்கிறோம்.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு ஜவுளிக் கழிவுகளைத் தனியாகப் பிரித்தல், சேகரித்தல், கையாளுதல் மற்றும் மறுசுழற்சிக்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களிடையே ஜவுளிக் கழிவுகளை பொறுப்புடன் அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, இந்த பயிற்சி வகுப்பினை தூய்மைப்பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு இப்பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் பொது மக்கள் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.





