கோவை: மாநகராட்சி சுகாதார பணியை தனியார் ஒப்பந்ததிற்கு விடுவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி சுகாதார பணிகளை தனியார் ஒப்பந்த முறையில் விடுவதை ரத்து செய்ய வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை உட்பட முக்கிய மாநகராட்சிகளில் சுகாதார பணிகளை தனியார் ஒப்பந்த முறையில் விடுவதற்கு கொள்கை முடிவானது வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சி சுகாதாரப் பணிகளை மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும் எனவும் தனியார் வசம் அதனை ஒப்படைத்தால் மாநகராட்சி பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் உரிய பணப்பலன் மருத்துவ பலன் கிடைக்காது என்று தெரிவித்துள்ளனர்.
அதன்படி கோவை மாவட்டத்திலும் மாநகராட்சி பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புசாரா சமூக நீதி மற்றும் பொதுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் பல மாதங்களாக போராடிவரும் கூலி உயர்வையும் வழங்க வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் மாற்றத்தை எதிர் நோக்கிய மக்களுக்கு வாய்க்கரிசி போடுகின்ற நிலையை முதல்வர் உருவாக்கி இருப்பதாகவும் எந்த ஒரு அடிப்படை வசதிகள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் இல்லாமல் கடந்த இரண்டு ஆட்சி காலத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் புதிய அரசு கண்டிப்பாக பணி நிரந்தரம் செய்வோம் என்று தங்களை எல்லாம் அழைத்துப் பேசியதாகவும் அப்படி இருக்கும் பொழுது அதிகாரிகளுடன் பேசிவிட்டு இது போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
உடனடியாக அரசு இதனை ரத்து செய்து தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மாற்றம் ஏற்படும் என்று கூறிய நிலையில் 40 நாட்கள் ஆகியும் குறைந்தபட்ச ஊதியம் கூட தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.



