கோவை: கோவையில் சமூக ஆர்வலர் ஒருவர் முதல்வருக்கு செவிதிறன் கருவியை அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவையில் சமூக ஆர்வலர் ஒருவர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக அரசின் நடவடிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு செவித்திறன் கருவி அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி, கோவை தலைமை தபால் நிலையத்தில் இருந்து முதல்வர் விஜய்யின் பனையூர் அலுவலக முகவரிக்கு செவித்திறன் கருவி ஒன்றை பார்சல் மூலம் அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இவ்விவகாரங்களில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் உரிய பதில் அளிப்பதில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக அரசின் நிலைப்பாடு தெளிவாக வெளிப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழக மக்களின் குரலும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களின் வேதனைகளும் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த செவித்திறன் கருவியை அனுப்பியுள்ளதாகவும், அதன் மூலம் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் சமூக ஆர்வலர் பெரியார் மணி தெரிவித்தார்.
இந்த சம்பவம் கோவையில் கவனத்தை ஈர்த்துள்ளது.


