கோவை: பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 35-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர். அருண் கார்த்திக் தலைமை வகித்தார். கௌரவச் செயலாளர் எஸ். ஜெகதீஷ் சந்திரன், 2025–26-ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் நூற்புத் தொழில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரிக்கு 2026-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரை விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு சிஸ்பா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், நூற்புத் தொழிலுக்கு நிலையான கொள்கை தேவைப்படுவதால், பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், 2026-ம் ஆண்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாததற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளுக்கும் நிலையான மின்சாரக் கட்டணக் கொள்கையை தொடர வேண்டும் என்றும், Maximum Demand Charges-ஐ குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் தரமான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மேம்பட்ட விதைகளை வழங்க வேண்டும் என சிஸ்பா வலியுறுத்தியது. பருத்தியின் உற்பத்தி மற்றும் மகசூலை அதிகரிப்பதுடன், வெளிப்படையான பருத்தி ஏல மையங்கள் மற்றும் சிறந்த சந்தைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நூற்பாலைகளில் இயந்திர நவீனமயமாக்கல், தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் மின்சாரச் சேமிப்பு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் 25 சதவீத மூலதன மானியம் வழங்கும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
நூற்பாலைகளில் பணிபுரியும் தகுதியுடைய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் பணிபுரியும் பகுதிகளில் நியாய விலைக் கடைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களின் பயன்களை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
செயற்கை இழைகள் போதுமான அளவில் தடையின்றி, போட்டித்தன்மை வாய்ந்த விலையில் கிடைக்கும் வகையில் மத்திய அரசு தொழில்துறைக்கு உகந்த நிலையான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் சிஸ்பா தெரிவித்தது.
மதிப்புக்கூட்டப்பட்ட நூல் மற்றும் துணி உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தின் முக்கிய பருத்தி நுகர்வு மையங்களில் இந்திய பருத்திக் கழகத்தின் (CCI) கிடங்குகளை அமைக்க வேண்டும் என்றும், CCI மூலம் கொள்முதல் செய்யப்படும் பருத்தியை எடுத்துச் செல்வதற்கான 30 நாள் காலக்கெடுவை 90 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, சிஸ்பாவின் 35-வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சைமா தலைவர் மற்றும் பல்லவா குழும நிர்வாக இயக்குநர் துரை பழனிசாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி. சம்பத் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சருக்கு சிஸ்பா சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். சங்கத்தின் வளர்ச்சிக்கு பங்களித்த முன்னாள் தலைவர்கள் ஆர். சின்னியன் மற்றும் ஆர். குப்புசாமி ஆகியோருக்கு அமைச்சரின் முன்னிலையில் “Visionaries of SISPA Award” வழங்கப்பட்டது.
மேலும், தொழில்துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் வி. சம்பத் குமாரிடம் சிஸ்பா நிர்வாகிகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் சிஸ்பா நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் என். பிரதீப் நன்றியுரை வழங்கினார்.





