கோவை:நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த விழா கொண்டாடப்படுவதற்கான காரணம் மற்றும் 10 நாட்கள் வரை கொண்டாடப்படுவது ஏன்? என்பது குறித்த வரலாற்றை இந்தத் தொகுப்பில் காணலாம்.
முக்கிய பண்டிகை
இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. இது தென்னிந்தியாவைக் காட்டிலும், வட இந்தியாவில் இந்தப் பண்டிகை வெகு கோலகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பாகுபலி விநாயகர் சிலைகள் முதல் குழந்தை விநாயகர், கிருஷ்ணன்,வீணை ஏந்திய விநாயகர் சிலைகள், அனுமன் ஏந்திய விநாயகர் சிலை என பல்வேறு வடிவமைப்புகளில் விநாயகர்கள் சிலைகள் இந்தாண்டு டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளன. சுமார் ஒரடி முதல் 10, 15 அடி வரை பிரமிக்க வைக்கும் அளவில் விநாயகர் சிலைகள் நாடு முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன.

மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா,கோவா போன்ற மாநிலங்களில் கோலாகலமாக 10 நாட்கள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல், நேபாளம், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் விநாயக சதுர்த்தி உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
கோவையில் 2300 சிலைகள்
இந்தியாவைப் பொறுத்தவரையில் கோவையில் மட்டும் 2,380 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புறத்தில் 780 சிலைகளும், புறநகரில் 1,600 சிலைகளும் பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதியளித்துள்ளனர். 3 அடி முதல் 11 அடி வரை பிரமாண்ட சிலைகள் பொது இடங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளன. ராஜவீதி தேர்நிலை திடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 11 அடி உயரம் கொண்ட ராஜவிநாயகர் சிலை பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல, சுந்தராபுரம் அண்ணா காலனியில் உள்ள வீர விநாயகர் கோவிலில் 8 அடி உயர வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரிிஷ்டை செய்யப்பட்டசிறப்பு பூஜைகளும், நடன நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது ஏன்?
முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. தடைகள் விலகி, செல்வம், ஞானம் மற்றும் தொட்டதெல்லாம் வெற்றி பெற அருள்பாலிக்கும் முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானின் பிறந்த நாளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்திற்கு வளர்பிறை சதுர்த்தி தினத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நேற்றைய தினம் (செப்டம்பத் 14) விநாயகர் சதுர்த்தி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பிள்ளையார் சுழி
மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டாலும், தற்போது நாம் கொண்டாடப்படும் பண்டிகையும், ஊர்வலங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் பாலகங்காதர திலகர். 1893ம் ஆண்டு இவர் ஆரம்பித்த சர்வஜன கணேஷ் உத்சவ் என்ற பெயரில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே, தற்போது வரையில் நாம் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களைக் காத்திடத் தவமிருந்த தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, சிவனும், பார்வதியாலும், உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான் என்று புராணங்கள் சொல்வதுண்டு. அப்படி படைக்கப்பட்ட விநாயகப் பெருமானுக்கு தடைகளை தகர்த்தெரியும் ஆற்றலையும் சிவபெருமான் வழங்கினார். யானை முகத்தோடும், மனித உடலோடும், படைக்கப்பட்ட விநாயகப் பெருமான், ஆவணி மாத சதுர்த்தியன்று அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, இந்தத் தினத்தில் தான் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
10 நாட்கள் ஏன்?
வியாச முனிவர் சொல்ல சொல்ல, மகாபாரதத்தை விநாயகர் எழுதியது 10 நாட்கள் நீடித்தது. அந்த இறுதி நாளில் விநாயகரின் உடல் சூடானதால், அவரை நீரில் குளிர்வித்ததாக ஐதீகம் உண்டு. இதன் நினைவாகவே விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக 3 மற்றும் 5 நாட்கள் வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த 10 நாட்களிலும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு பூஜை என 10 நாட்கள் மிகவும் விஷேசமாக இருக்கும்.
முதல் நாள்
முதல் நாளில் விநாயகர் சிலையை வீட்டில் வரவேற்கும் விதமாக, பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த வேண்டும். நல்ல நேரம் பார்த்து சிலையை பிரதிஷ்டை செய்து, கொளுக்கட்டை மற்றும் பழங்கள், சுண்டல் போன்றவற்றை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
2ம் நாள்
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் இது முக்கியமான நாளாகும். சதுர்த்தி திதியான இந்த நாளில் நாளில் தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும்.
3ம் நாள்
3ம் நாளில் விநாயகருக்கு பிடித்த வைவேத்தியங்களை படைத்து ஆரத்தி காண்பித்து, சிறப்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும்.

4ம் நாளில்
இந்த நன்னாளில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும். இந்த நாளில் பஜனைகள் செய்து, விநாயகரை மகிழ்விக்க வேண்டும். இனிப்புகள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை படைத்து, அனைவருக்கும் வழங்க வேண்டும்.
5ம் நாளில்
பண்டிகையின் 5ம் நாளில் விநாயகருக்கு ஷோடஷோபசர் பூஜை செய்யப்பட வேண்டும். இது விநாயகர் சதுர்த்தியின் முக்கிய நாளாகவும் பார்க்கப்படுகிறது.
6ம் நாளில்
6வது நாள் சஷ்டி திதியன்று விநாயகப் பெருமானுக்கு சிறப்பான பூஜைகள் செய்து வழிபட வேண்டும். இதனை கசேஷ சஷ்டி என்றும் அழைப்பார்கள். வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தூப தீப ஆராதனை காட்ட வேண்டும். இந்த நாளில் தானம் கொடுத்தால் மிகவும் பலனுள்ளதாகும்.
7ம் நாளில்
இந்த நாளில் விநாயகப் பெருமானுக்கு சப்தபதி பூஜைகள் செய்து வழிபடுவது நல்ல பலனளிக்கும். இந்த நாளில் சிறப்பு பூஜைகள் செய்வது மிகவும் நன்மை அளிக்கும்.
8ம் நாளில்
அஷ்டமி திதியன்று சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் செய்து விநாயகருக்கு விருப்பமான இனிப்புகளை படைத்து வழிபாட நடத்த வேண்டும்.
9ம் நாளில்
9வது நாளில் நவபத்ரிகா பூஜை நடத்த வேண்டும். நவகிரகங்களுக்கான பூஜை இதுவாகும். நவகிரக தோஷம் இருந்தால், அதனை விநாயகர் தனது அருளால் நீக்கி விடுவார் என்பது நம்பிக்கையாகும்.
10ம் நாள்
இந்த உற்சவத்தின் கடைசி நாளான இந்த நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். அப்போது, மேளதாளங்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மகிழ்ச்சியுடன் விநாயகரை வழியனுப்பி வைப்பார்கள். இந்த நாளில் மக்களுக்கு தானம் வழங்குவது பயனுள்ளதாகும்.
விநாயகர் சிலைகளை வீட்டில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்திவிட்டு, பிறகு அதனை நீர்நிலைகளில் கரைக்கும் போது, நம்முடைய துன்பங்கள், கஷ்டங்களும் விநாயகர் சிலையுடன் கரைந்து போகும் என்பது நம்பிக்கை.




