வேலூர்: சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் “பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா” என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, வரும் ஜூன் 28-ம் தேதி வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு வேலூரில் நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா கலந்து கொண்டு நிகழ்ச்சி குறித்த விவரங்களை விளக்கினார்.
அவர் கூறுகையில், தற்போதைய சூழலில் நஞ்சில்லாத உணவு உற்பத்தியும், விவசாயிகளின் பொருளாதார தற்சார்பும் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளதாக தெரிவித்தார். பாரம்பரிய விதைகள் மற்றும் காய்கறி சாகுபடியை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை வணிக ரீதியாக லாபகரமாக மாற்றுவதற்கான வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கில் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுவதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா சிறப்புரையாற்றுகிறார்.
மேலும், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேராசிரியர் துசார் கந்தி பேஹேரா, வி.ஐ.டி. வேளாண் கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட கற்றல் பள்ளியின் துறைத்தலைவர் டாக்டர் ஆர். ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
கருத்தரங்கில் இயற்கை விவசாயம், பாரம்பரிய விதை பாதுகாப்பு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, இயற்கை விளைபொருட்களின் சந்தைப்படுத்தல், மாடித்தோட்டம், காய்கறி மதிப்புக்கூட்டல், பாரம்பரிய காய்கறி சாகுபடி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முன்னணி வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை விவசாயிகள் மற்றும் விதை பாதுகாவலர்கள் வழிகாட்ட உள்ளனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாரம்பரிய விதைகள், இயற்கை விளைபொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் பிரம்மாண்ட கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.
அதேபோல், பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வரும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் வகையில் “விதை பாதுகாவலர் விருதுகள் – 2026” வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் திருவிழாவில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் என்றும், கூடுதல் தகவல்களுக்கு 83000 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



