கோவை: தமிழக வெற்றி கழக அரசு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தமிழக அரசு விவசாயிகளுக்கான பயிர் கடனில் சிறு விவசாயிகளுக்கு 50,000 தள்ளுபடி அறிவித்தது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்ட நேரத்தில் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்த நிலையில் தற்போது 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது ஏமாற்றத்தை அளித்திருப்பதாக பல்வேறு விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 40க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசு விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகளை பெரு விவசாயிகள் சிறு விவசாயிகள் என்று விரிவுபடுத்தக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு அரசு விவசாயிகளை பிரிவு படுத்தாமல் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஜூன் 30-ம் தேதி வரை மறுபரிசீலனைக்கு காத்திருப்போம் தீர்வு எட்டப்படாத நிலையில் சென்னை தலைமை செயலகத்தை நோக்கி திரள்வோம் என்று கூறியுள்ளனர்.


