கோவை: கேரள மாநிலம் அட்டப்பாடியில் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில், தமிழ்நாடு போலீசார் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே புதூர் குளப்பாடி பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (51) என்பவரை தமிழ்நாடு தடாகம் போலீசார் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கேரள போலீசார் தமிழ்நாடு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகாரின்படி, இரவு நேரத்தில் முருகேஷை சந்தித்த தமிழ்நாடு போலீசார், “கஞ்சா வைத்துள்ளாயா?” என்று விசாரித்ததாகவும், பின்னர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் முருகேஷுக்கு விலா எலும்பு முறிவு மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த முருகேஷ் தற்போது கேரளாவில் உள்ள கோட்டத்தற அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், முருகேஷின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பு, கேரள போலீசாருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர். மேலும், தற்போது வரை முருகேஷ் மீது தமிழ்நாடு போலீசில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு போலீசார் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.





