கோவை : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தம்பட்டி படகர் கிராமத்தில் பாரம்பரியமிக்க ‘உரி ஹப்பா’ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் படகர் சமுதாய மக்கள் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தி, உறி அடித்தும், நாட்டுப்புற நடனமாடியும் விழாவை சிறப்பித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படகர் சமுதாய மக்களின் முக்கிய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ‘உரி ஹப்பா’ திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தை ஒட்டி, கிராமத்தின் அமைதி, செழிப்பு மற்றும் நலனுக்காக இந்த விழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கோத்தகிரி அருகே உள்ள தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஹெத்தையம்மன் ஆலய வளாகத்தில் இந்த ஆண்டுக்கான ‘உரி ஹப்பா’ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவையொட்டி கிராமத்தின் முக்கிய வீதிகள் மற்றும் கோவில் வளாகம் வண்ண மலர்கள், தோரணங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையிலேயே கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகாதீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும், உயரத்தில் கட்டப்பட்டிருந்த பானையை உடைக்கும் ‘உறி அடித்தல்’ போட்டியும் நடைபெற்றது. இதில் தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டி போட்டு உறியை அடித்து மகிழ்ந்தனர். இதனை அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து படகர் சமுதாய மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. படகர் மக்களின் பாரம்பரிய வெள்ளை நிற ஆடைகளை அணிந்த ஆண்களும் பெண்களும் ஒன்றிணைந்து, பாரம்பரிய இசைக்கு ஏற்ப வட்டமாக நின்று நாட்டுப்புற நடனம் ஆடினர்.
வீடியோ
பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி விழாவுக்கு வந்திருந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இளம் தலைமுறையினரும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள கெத்தை, ஜக்கதளா, அரவேனு உள்ளிட்ட பல்வேறு படகர் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொண்டனர். கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்ட பக்தர்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் பாரம்பரிய சிறப்பு உணவுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பாரம்பரிய வழிபாடு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், நாட்டுப்புற நடனம் மற்றும் அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ‘உரி ஹப்பா’ திருவிழா, தம்பட்டி கிராமத்தில் உற்சாகமான சூழலை ஏற்படுத்தியது.





