கோவை: பொங்கல் நாளில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது.
பொங்கல் தினத்தன்று சாலை விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வடபருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் நாட்டுதுரை. கடந்த 15ஆம் தேதி பொங்கல் தினத்தன்று மாலை இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 16ம் தேதி நாட்டுதுரைக்கு முளைச்சாவு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடல் உறுப்பு தானம் பற்றி அவரது உறவினர்களிடம் எடுத்துக் கூறியதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர்.
தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி ஆலோசனையின் படி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்பு தானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி அவரது கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி உட்பட தனியார் மருத்துவமனைக்கும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.
பின்னர் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட நாட்டுதுரையின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

