கோவை: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை கோவில் நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 25ஆம் தேதி மாலை 5 மணி அளவில் விநாயகர் பூஜை வாஸ்து சாந்தி நடைபெறும். 26 ஆம் தேதி காலை 6:30-7:00 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.
31ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறும். பிப்ரவரி 1ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருத்தேர் இழுக்கப்பட்டு திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.
2ம் தேதி மாலை 4:30- 7:30 மணிக்குள் தெப்பத் திருவிழா நடைபெறும். 3ம் தேதி மாலை 4:30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்வும் 4ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை வசந்த உற்சவம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு 30ம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மலை கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் இந்த நாட்களில் பக்தர்கள் மலைப்படிகள் அல்லது திருக்கோவிலின் பேருந்து மற்றும் கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் மலைக் கோவிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

