கோவை; கோவை செங்காளிபாளையம் பகுதியில் பாஜக சார்பில் 10 நாட்கள் நடக்கும் மத்திய அரசின் சிறப்பு நலத்திட்ட முகாம் தொடங்கியது.
மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடையே கொண்டு செல்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கோவை மாநகர் மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் கிழக்கு மண்டல் பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட
காந்தி காலனி மற்றும் செங்காளி பாளையம் பாஜக சார்பில் மத்திய அரசின் சிறப்பு நலத்திட்ட முகாம் செங்காளி பாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த முகாமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ப்ரீத்தி லட்சுமி தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் ஆதார் பெயர் மற்றும் முகவரி மாற்றம், பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா இலவச கேஸ் இணைப்பு, பிரதம மந்திரியின் செல்வமகள் திட்டம், அஞ்சல் துறையின் இன்சூரன்ஸ், பிரதம மந்திரியின் அயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, பிரதமரின் ஸ்வாநிதி சாலையோர வியாபாரிகள் கடன் திட்டம், பிரதம மந்திரியின் இ-ஷ்ரம் கார்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் திட்டம் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை மண்டல் துணைத்தலைவர் கனகராஜ் மற்றும் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னின்று செய்திருந்தனர்.

