கோவையில் மர இழைப்பகத்தில் தீ விபத்து- ஒரு கோடி ரூபாய் பொருட்கள் நாசம்…

கோவை: கோவையில் மர இழைப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமாகின.

கோவை, கண்ணப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு மர இழைப்பகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின.

கோவை, கண்ணப்பன் நகரைச் சேர்ந்த நசீம் (என்கிற சலீம்), அதே பகுதியில் வீட்டு உபயோக மரப் பொருட்கள் தயாரிக்கும் மர இழைப்பகம் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு மெத்தை, நாற்காலிகள், மேஜைகள் மற்றும் கதவுகள் போன்ற பொருட்கள் விலை உயர்ந்த மரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வந்தன.

நேற்று இரவு பணிகளை முடித்து விட்டு நிறுவனத்தை பூட்டிச் சென்ற நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் நிறுவனத்தில் திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கியது.

மரங்கள் என்பதால் தீ மளமளவெனப் பரவியது. வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக கவுண்டம்பாளையம் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் இரண்டு மணி நேரம் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், நிறுவனத்தில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தேக்கு மற்றும் பிற மரப் பொருட்கள், இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து கரியாகிப் போனது.

இந்த விபத்து குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp