கோவை: கோவையில் மனைவிக்கு தெரியாமல் பெண் தோழியுடன் தங்கிருந்த தொழிலதிபர் விபரீத முடிவு எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேஎன்ஜி புதூர் பிரிவு பகுதியை சேர்ந்தவர் கீர்த்திவாசன் (47). இவர் தனது மனைவியுடன் சேர்ந்து தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கீர்த்திவாசனுக்கு திருப்பூரை சேர்ந்த அஸ்வினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கீர்த்திவாசன் தனது மனைவிக்கு தெரியாமல் அஸ்வினியுடன் சிங்காநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து குடும்பம் நடத்த தொடங்கினார்.
அவ்வபோது தனது மனைவியிடம் வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு அஸ்வினியுடன் இருந்து வந்துள்ளார். இதேபோல கடந்த 1ம் தேதி கீர்த்திவாசன், தனது மனைவியிடம் கரூர் செல்வதாக கூறி அஸ்வினி வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார்.
அப்போது அஸ்வினி திருப்பூர் சென்றிருந்தார். மறுநாள் அஸ்வினி வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் கதவை தட்டி உள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் கீர்த்திவாசன் கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அஸ்வினி அக்கம் பக்கத்தினர் உதவுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கீர்த்திவாசன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அஸ்வினி, கீர்த்திவாசனின் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர், கீர்த்திவாசனின் மனைவியிடம் கூறியுள்ளார். அவர் உடனே அங்கு சென்ற மனைவி கீர்த்திவாசனின் உடலைக் கண்டு கதறி அழுதார்.
தகவல் அறிந்து சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கீர்த்திவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கீர்த்திவாசனின் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

