கோவை: சின்னியம்ப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் மது பாரில் மோதலில் ஈடுபட்டு நாற்காலிகள், கார் கண்ணாடியை உடைத்த
9 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பீளமேட்டை அடுத்த சின்னியம்பாளையத்தில் நட்சத்திர விடுதி செயல்பட்டுகிறது. இங்கு மது விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு மது அருந்துவதற்கு 4 பேர் வந்துள்ளனர். அதிக அளவில் மது அருந்திய அவர்கள் ஒருவருக்கு, ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு இருந்த பார் ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஊழியர்களை கற்களால் தாக்கி, அங்கு இருந்த நாற்காலிகளை உடைத்தனர்.
தொடர்ந்து வெளியே வந்த அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர். இதுகுறித்து நட்சத்திர விடுதி மேலாளர் கே.கே. புதூர், சிந்தாமணி நகரை சேர்ந்த, பிரேம்குமார் (48) பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தகராறில் ஈடுபட்டது சிவனேஷ் குமார், சேதுராம், ஹேமநாத், நவநீதன் ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்,
அதேபோல கோல்ட்வின்ஸ் அருகில் உள்ள தனியார் ஓட்டலிலும் மது அருந்த வந்த 5 பேர் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, பாட்டில்களை அடித்து உடைத்தனர்.
மேலும் அங்கிருந்த நாற்காலிகளையும் சேதப்படுத்தினர். அப்போது அதை தடுக்க முயன்ற ஓட்டல் பார் ஊழியர் முனீஸ்வரன் என்பவரை தாக்கினர்.
இதுகுறித்து ஓட்டல் மேலாளர் லோகநாதன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தகராறில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

