கோவை: திருச்சி சாலை மேம்பாலத்தின் கீழ் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோண மூலை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகன் எபினேசர் ( வயது 45).
இவர் கோவை ராமநாதபுரத்தில் சாலை ஓரத்தில் தங்கிக் கொண்டு கிடைக்கும் வேலைகளைப் பார்த்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் அருகே மருதூரில் தர்மராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக்கடையில் வேலை பார்த்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் எபினேசர் நேற்று காலை ராமநாதபுரம் தனியார் பள்ளி அருகில் திருச்சி சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் காலில் காயம்பட்ட நிலையில் ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை யாரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, இந்த நிலையில் எபினேசர் வேலை பார்த்த கடையின் உரிமையாளர் தர்மராஜ் என்பவருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்துள்ளது.
தொடர்ந்து எபினேசரின் அண்ணன் அற்புதராஜை தொடர்புகொண்ட தர்மராஜ், மதுபோதையில் எபினேசர் காலில் காயத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்குள்ளாக, எபினேசர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்ற ராமநாதபுரம் போலீசார் எபினேசர் உடலைக் கைப்பற்றி இ .எஸ் .ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், எபினேசர் சாலையில் படுத்து இருந்தபோது அவரது காலில் வாகனங்கள் ஏதும் ஏறி இறங்கியதா? அல்லது வேறு காரணமா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

