கோவை: கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறி லோடு இறக்க காத்திருந்த போது, லாரியின் கதவு திடீரென திறந்ததால் தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (50). இவர் கோவையில் கடந்த 30 வருடங்களாக தங்கி எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில், மகாதேவன் என்பவரிடம் சேர்ந்து வேலை செய்து வந்தார்.
நேற்று பெங்களூரில் இருந்து லாரியில் இருவரும் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். லாரி மேட்டுப்பாளையம் ரோட்டில், எம்.ஜி.ஆர். மார்க்கெட் அருகில் நின்று கொண்டிருந்தது.
அப்போது லாரியின் பக்கவாட்டு கதவின் அருகில் பிரகாஷ் அமர்ந்து இருந்தார். காய்கறி இறக்குவதற்காக இருவரும் காத்திருந்தனர்.
அப்போது லாரியின் கதவு திடீரென திறந்தது.
இதனால் லாரியின் கதவு அருகில் அமர்ந்து இருந்த பிரகாஷ் நிலை தடுமாறி லாரியிலிருந்து பின்புறமாக கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அவரை மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இது குறித்து அவரது மகன் சாம்ராஜு சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.
அதில் கவனக் குறைவு காரணமாக தனது தந்தை கீழே விழுந்து இறந்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார்.
அதன்படி சாய்பாபா காலனி போலீசார் மகாதேவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

