கோவை: ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மஹாசிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே மனிதர்களின் உயிர் சக்தி மேல்நோக்கி எழுவதற்கு உதவும் வகையில் இருக்கின்றது.
இந்த ஆன்மீக சாத்தியத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நம் கலாச்சாரத்தில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மஹாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஈஷாவில் 32-ஆவது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் இன்று பிரம்மாண்டமான அளவில் நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் லட்சக் கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு வரும் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நாளை காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது.
ஆதியோகி முன்பு சத்குருவுடன் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம் மற்றும் தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
மஹாசிவராத்திரி இரவு முழுவதும் தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவி வளாகங்கள் பொது மக்களின் தரிசனத்திற்கு திறந்து இருக்கும்.
தியானலிங்கத்திற்கு பொது மக்கள் தங்களின் கைகளாலேயே அபிஷேகமும் செய்ய முடியும்.
இந்தாண்டு மஹாசிவராத்திரி அன்று, முதன் முறையாக, சத்குரு ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் யோகேஷ்வர லிங்கத்திற்கு ‘மஹா அபிஷேகம்’ எனும் ஆன்மீக செயல்முறையை அர்ப்பணிக்கிறார்.
யோகேஷ்வர லிங்கத்தின் அருளை பெரும் வகையில் குறிப்பிட்ட மந்திர உச்சாடனங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளுடன் இந்த அபிஷேக செயல்முறை நடைபெற உள்ளது.
ஈஷா மஹாசிவராத்திரி விழாவின் மிக முக்கிய அம்சமாக நள்ளிரவு சந்தியா மற்றும் பிரம்மமுகூர்த்த நேரங்களில் சக்தி மிகுந்த தியானங்கள் சத்குருவால் வழிநடத்தப்பட உள்ளன.
இவ்விழாவில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையிலும், நம் பாரத பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை வடிவங்களை வெளிப்படுத்தும் வகையிலும் இரவு முழுவதும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ராப் இசைக்கலைஞர் பிளேஸ், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் ஆதித்யா காத்வி, மகாராஷ்டிராவை சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் பிரசாந்த் சோனாக்ரா மற்றும் குழுவினர், ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறக் கலைஞர் ஸ்வரூப் கான், ராப் இசைக்கலைஞர் பாரடாக்ஸ் மற்றும் சவுண்டஸ் ஆப் ஈஷா குழுவுடன் இணைந்து பாடகர்கள் சுவாகத் ரத்தோடு, பிருத்வி காந்தர்வ் ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.
இதனுடன் ‘புராஜக்ட் சம்ஸ்கிருதி’ குழுவின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சியும், ஈஷா சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களின் தேவார பண்ணிசை மற்றும் களரிப்பயட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
மஹாசிவராத்திரி விழாவிற்கு நேரில் வரும் மக்களின் வசதிக்காக தேவையான பார்கிங், சுத்திகரிக்கப்பட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், உடனடி மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இவ்விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தர உள்ளனர், இருப்பினும் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இலவச இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் விழாவிற்கு முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மஹாசிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோவில்களிலும் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
ஈஷா மஹா சிவராத்திரி விழாவை நேரலையில் இங்கே காணலாம்.

