கோவை: காதலன் தகராறு செய்ததால் கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து மாணவி குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இருந்து கோவைக்கு இன்று அதிகாலை தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். அப்போது அந்த பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவரும், அவருடன் வாலிபர் ஒருவரும் பயணம் செய்தனர்.
பேருந்தில் இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தனர். சக பயணிகள் அவர்கள் காதல் ஜோடிகள் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் இருந்தனர். சிறிது நேரத்தில் பேருந்துக்குள் திடீரென்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் கண்டித்துப் பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாய் தகராறு முற்றியுள்ளது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தபடியே பயணம் செய்துள்ளனர்.
இதற்கிடையே பேருந்து அவிநாசி – கோவை சாலையில் ஜி.டி. மியூசியம் அருகே வந்தபோது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்டக்டர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
மேலும் பேருந்தில் தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்களை பேருந்திலிருந்து இறங்கும்படி கூறியுள்ளார். ஆனாலும் அந்த வாலிபர் தொடர்ந்து மாணவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி திடீரென பேருந்தின் படிக்கட்டிற்கு சென்றார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் ஓடும் பேருந்திலிருந்து சாலையில் குதித்துள்ளார்.
இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாலையில் குதித்ததால் மாணவியின் தலை, இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே பேருந்து டிரைவர் பேருந்தை நிறுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள், படுகாயத்துடன் கிடந்த மாணவியை மீட்டு ஆட்டோ மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை பார்த்த அந்த வாலிபரும் பேருந்திலிருந்து இறங்கி மாணவி இருந்த இடத்திற்கு ஓடினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், காயமடைந்த மாணவி சாய் என்றும், அவருடன் இருந்த வாலிபர் கௌதம் என்றும் தெரியவந்தது. இருவரும் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்தில் மாணவியின் செருப்பு மற்றும் ரத்தக் கறைகள் இருந்ததை பார்த்த பொதுமக்கள் சோகமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

