கோவை: கோவையில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் அறிவியல் சார்ந்த விஷயங்களை அனுபவித்து உணர்ந்தார்.
கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் அறிவுசார் மையமாக சுமார் எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இதன் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவைக்கு வருகை புரிந்துள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இங்கு இடம்பெற்றுள்ள பல்வேறு வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார். நூலகம் இடம்பெறும் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, கலையரங்கம், அறிவியல் சார்ந்த பகுதி, என அனைத்தையும் ஆய்வு செய்தார்.

மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள கோளரங்கில் 3D கண்ணாடி அணிந்து முப்பரிமாண காட்சிகளை கண்டு ரசித்தார். மேலும் முப்பரிமான வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோரது சிலைகளை பார்வையிட்ட அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அறிவியல் சார்ந்த கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் பார்வையிற்றார்.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் அனைத்தையும் முதல்வருக்கு எடுத்துரைத்தார். உடன் அமைச்சர்கள் சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மேயர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

