கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை மற்றும் இணையவழி கல்வி மையம் மூலம் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 16 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை மற்றும் இணையவழி கல்வி மையம் (CDOE) சார்பில் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜவேல் தொடங்கி வைத்தார். மேலும், மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து தொழில்திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்தகைய முகாம்கள் அவர்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொலைநிலை மற்றும் இணையவழி கல்வி மையத்தின் இயக்குநர் செல்லசாமி இந்த முகாமை ஒருங்கிணைத்தார். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வேலைவாய்ப்புகளை அணுக வேண்டும் என்றும், திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் கூறினார்.
16 மாணவர்கள்
இந்த முகாமில் டிஜி விர்ச்சுவல், கிரேட் இன்ஸ்டிட்யூட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மொத்தம் பங்கேற்ற 51 மாணவர்களில் 16 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தொலைநிலை மற்றும் இணையவழி கல்வி மையத்தின் துணை இயக்குனர் சுரேஷ், பணியமர்த்துதல் அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர்.

