கோவை: வடவள்ளியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில், காயங்களுடன் வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் வடவள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஓடை அருகே கிடந்த உடலை மீட்டனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த வாலிபரின் தலை, கை, கால்களில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால், அவரை மர்ம நபர்கள் கடுமையாக தாக்கிக் கொலை செய்து, பின்னர் உடலை வனப்பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் கல்வீரம்பாளையம், முருகன் நகரைச் சேர்ந்த தங்கராஜின் மகன் சசிகுமார் என்பது தெரியவந்தது. தங்கராஜ் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
எம்.பி.ஏ. பட்டம் முடித்துவிட்டு வேலை தேடி வந்த சசிகுமார், எவ்வாறு கொலை செய்யப்பட்டார், அவரைக் கொலை செய்தவர்கள் யார், கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து வடவள்ளி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: மேகதாது அணை விவகாரம்- தமிழக அரசின் முயற்சி பலனளிக்காது- புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி…
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சசிகுமாரின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமீபத்தில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, கொலைக்கான முழு பின்னணியையும் கண்டறிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடவள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





