கோவை: வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சனையால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தண்ணீர் பெட்ரோல் வண்ணத்தில் வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
அங்கு டன் கணக்கில் மலைபோல சேர்ந்துவரும் குப்பைகளை அகற்ற ஒரு சில திட்டங்களை அரசு அறிவித்தபோதிலும், எதுவும் மக்கள் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் இல்லை.
கடும் துர்நாற்றம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகளால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச பாதிப்புகளை வெள்ளலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தினந்தினம் சந்தித்து வருகின்றனர்.
பெட்ரோல் நிறத்தில்
குப்பைக் கிடங்கில் சேர்ந்துள்ள குப்பைகளால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதனால் அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இல்லத் தேவைகளுக்காக போர் (ஆழ்துளை) மூலம் பெற்றுவரும் நீர் மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பவமாக அங்கு உள்ளது. இந்த நிலையில் இன்று இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு நீர் மிகவும் மஞ்சள் நிறத்தில் ஆழ்துளையில் இருந்து வந்துள்ளது.
இதுபற்றி சமூக செயற்பாட்டாளர் கே.எஸ்.மோகன் கூறியதாவது:-
மாநகராட்சி தரப்பில் கொடுக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை என்பதால் மக்கள் ஆழ்துளை போட்டு நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்று இதற்கு முன்பு பார்த்திடாத அளவுக்கு மஞ்சள் நிறத்தில் போர் நீர் குழாயில் நுரையுடன் வெளிவந்தது. இதுபற்றிய தகவல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நிறத்தில் நீர் வருவது அடிக்கடி நடக்கும் ஒன்றாக உள்ளது. மகாலிங்கபுரம், கோணவாய்க்கால் பாளையம், ஸ்ரீ ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த தாக்கம் உள்ளது.
அதிர்ச்சி வீடியோ
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இதேபோல சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து நாளிதழ்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மீண்டும் கடும் மஞ்சள் நிறத்தில் நீர் வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மாநகராட்சி தரப்பில் இந்த பாதிப்பை நிரந்தரமாகத் தடுக்க நடவடிக்கை தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.

