கோவை: கோனியம்மன் கோயில் தேரோட்ட நிகழ்வில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடிநீர் வழங்கினர்.
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு அக்னி குண்டம் ஏந்தி வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பருக வைத்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்தது.
கோவை மாவட்டதின் காவல் தெய்வம் என்று வணங்கக்கூடிய கோனியம்மன் திருக்கோவில் தேரோட்ட திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் பழமை வாய்ந்த அத்தார் ஜமாத் பள்ளிவாசலின் சார்பாக வரக்கூடிய பக்தர்களுக்கு சுமார் 15,000 தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைவரும் அண்ணன் தம்பியாக இந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கோவிலுக்கு அக்னி குண்டம் கொண்டு வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் கொடுத்தனர். மேலும் பக்தர்களுக்கும் குடிநீர் அளிக்கப்பட்ட சம்பவம் அனைவரும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகளாக..
இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை நாங்கள் செய்து வருகிறோம். மதத்தைக் கடந்த நட்புணர்வுடன் வாழும் மக்கள் நாங்கள் எனவும் அவ்வாறு கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் தேர் திருவிழாவில் எங்களால் முடிந்த இதை செய்வது மகிழ்ச்சி என தெரிவித்தனர்.



