கோவை: கோவையில் இரண்டு இடங்களில் முதல்வர் படைப்பகம் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் முதல்வர் படைப்பகம் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட காந்தி மாநகர் மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஜீவா நகர் ஆகிய இரண்டு இடங்களில் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, தற்போது பணிகள் நிறைவுபெற்று, விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்த முதல்வர் படைப்பகத்தில் பட்டதாரிகள், UPSC TNPSC வங்கி மற்றும் இரயில்வே உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் சுமார் 48,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
மேலும் அத்தியாவசியமான பொருட்கள், மேசைகள், நாற்காலிகள், கணினி வசதி மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சிகள் வழங்குவதற்கான கூடங்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான பரந்த அளவிலான சேவைகள் வசதிகள் மற்றும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் வகையில், இப்படைப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முதல்வர் படைப்பகங்கள் மூலமாக இரண்டு இடங்களிலும் தலா 500க்கும் மேற்பட்டோர் எனவும் மேலும், அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.



