கோவை: கோவையில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர், வனத்துறை சார்பில் நீலகிரி வரையாடு திட்டத்தின் கீழ் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையத்திற்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு, பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், வனத்துறை சார்பில் நீலகிரி வரையாடு திட்டத்தின் கீழ் ரூ.9.80 கோடி மதிப்பீட்டில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையத்திற்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்து, நீலகிரி வரையாடு சிலையினை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை வனப்பாதுகாவலர் / ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, நீலகிரி வரையாடு உதவி திட்ட இயக்குநர் கணேஷ்ராம், மாண்புமிகு மாநகராட்சி ரங்கநாயகி ராமசந்திரன் மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், மாமன்ற உறுப்பினர் வித்யா ரங்கநாதன். ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசின்n வரலாற்று சிறப்புமிக்க முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை 12.10.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே மாநில விலங்கினை பாதுகாக்க முதல் முதலாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட தனித்துவமான திட்டமாகும்.
இத்திட்டத்திற்கு ரூ.25.14 கோடி ஒதுக்கீடு செய்து செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் கட்டுவதற்காக கோயம்புத்தூரில் உள்ள காந்திபுரத்தில் நீலகிரி வரையாடு திட்டத்திற்கு 50 சென்ட் பரப்பளவுள்ள நிலம் ஒதுக்கப்பட்டு, தற்போது ரூ.9.80 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மையம் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இம்மையத்தில் நீலகிரி வரையாடு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அதனை ஆவணப்படுத்தல், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடப் பகுதிகளான புல் மலைகளையும். சோலைக்காடுகளையும், நீலகிரி வரையாடுகளுடன் பிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற பழங்குடியினர் வாழ்வியல் சூழல் மற்றும் வரையாடுகளின் வகைகளை பல நம் கண் முன் காட்சிப்படுத்தப்படும்.
நவீன தொழில்நுட்பங்கள், காட்சிகள் மற்றும் அறிவியல் தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு செயல்பாடுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இம்மையம் அமையும். இந்த பாதுகாப்பு மையம் வனத்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக திகழும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



