கோவை: சிங்காநல்லூரில் ரூ.31.22 கோடி மதிப்பீட்டில் காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவையில் காட்டூர், பீளமேடு, உக்கடம், போத்தனூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், ரத்தினபுரி, செல்வபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட 20 காவல் நிலையங்கள் உள்ளன.
குற்றப்புலனாய்வு, சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பாப்பநாயக்கன்பாளையம், உப்பிலிபாளையம், பீளமேடு ஆகிய இடங்களில் காவலர் குடியிருப்புகள் உள்ளது.
இந்நிலையில், கோவை சிங்காநல்லூரில் காவலர் மற்றும் தலைமை காவலர்களுக்கு குடியிருப்புகள் ரூ. 31.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதன் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதனை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் தலா 664 சதுரடி பரப்பளவில் 100 குடியிருப்புகள் உள்ளன.
இவை நவீன கட்டுமான வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாநகர காவல் துறையினரின் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.



