கோவை: கோவையில் பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நஞ்சுண்டாபுரம் பார்சன் குடியிருப்பில் வசித்து வருபவர் ஆயுர்வேத மருத்துவரான ராம்குமார் குட்டி. இவருடன் இவரது தாயாரான கஸ்தூரியும் வசித்து வருகிறார்.
மருத்துவர் ராம்குமார் குட்டி குடும்பத்துடன் வியட்நாம் சென்றிருந்த நிலையில், வீட்டில் 82 வயதான கஸ்தூரி மட்டும் இருந்துள்ளார். இவர்களது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த பணிப்பெண்ணும் இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை ராம்குமார் அவரது தாய் கஸ்தூரிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாக போன் எடுக்காததால் அருகில் இருப்பவர்களுக்கு, ராம்குமார் போன் செய்துள்ளனர். பின்னர் அண்டை வீட்டார் சென்று பார்த்த போது, கை ,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கஸ்தூரி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராம்குமார் குட்டிக்கும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கஸ்தூரியின் கை ,கால்களை கட்டப்பட்டு வீட்டில் இருந்த நகைகள் திருடப்பட்டு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்த போலீசார், மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீட்டின் பின்புறம் கஸ்தூரியின் கைபேசி மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மற்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



