கோவை: வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றத்திலிருந்து கோவை திரும்பிய மக்கள் அங்கு நிலவும் பதற்றமான சூழலை வீடியோ காட்சிகளை காட்டி பகிர்ந்து கொண்டனர்.
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் துபாய்க்கு சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த 12 பேர் (3 குடும்பங்கள்) அங்கு இருந்து திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்ட நிலையில் இந்திய அரசால் மீட்கப்பட்டு கோவை திரும்பி உள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது:-
சுற்றுலாவிற்காக மூன்று குடும்பங்கள் துபாய் சென்றிருந்தோம். சுற்றுலாவை முடித்துவிட்டு கோவை வருவதற்காக விமான நிலையம் சென்று கொண்டிருந்த பொழுது விமான நிலையத்தை சுற்றிலும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடைபெற்றது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு சென்ற எங்களை மீண்டும் ஹோட்டலுக்கே திரும்பிச் செல்லக் கூறி விட்டார்கள்.
மூன்று நாட்கள் துபாயில் மிகவும் சிரமத்துடன் தங்கி இருந்தோம். அங்கு உணவு மருந்து அனைத்தும் விலை அதிகமாக இருந்தது. எங்கள் நண்பர் மூலம் பாஜகவி.,னரை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம், NRI-யை தொடர்பு கொண்டு நாங்கள் பத்திரமாக கோவை திரும்பினோம். அங்கு பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தோம்.
அபுதாபியில் விமான நிலையத்திற்குள் இமிகிரேஷனை தாண்டியவர்களுக்கு மட்டும் உணவுகள் அனைத்தும் வழங்கப்பட்டது. மீதமிருந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. மீடியாக்களில் அபிதாபி அரசு அனைவரையும் பார்த்துக்கொண்டது என்று செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் அது முழுமையான உண்மை இல்லை. அதே சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கூறப்படுவதும் உண்மை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



