கோவை: விஜய் தனியாக ஆட்சி அமைப்பார் என யாராலும் நம்ப முடியாது என்று பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. விமர்சனம் செய்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
கோவையில் இருந்து கிட்டத்தட்ட 12 பேர் துபாயில் 5 நாட்கள் சுற்றுலாவிற்காக சென்றவர்கள் அங்கு போர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக உதவி கேட்டனர். அவர்களது தொலைபேசி எண்கள் எங்களின் என்.ஆர்.ஐ செல் வாயிலாக துபாயில் இருக்கும் எங்களது அமைப்பிற்கு கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் இந்திய அரசு ஏற்பாடு செய்த விமானத்தில் பத்திரமாக ஊர் திரும்பி உள்ளனர். இவர்கள் அத்தனை பேரும் இந்த உதவியை செய்ததற்காக பாரதிய ஜனதா கட்சிக்கும், எனக்கும் நன்றி தெரிவிப்பதற்காக விமான நிலையத்திற்கு வந்து உள்ளனர்.
அவர்கள் காண்பித்த ஒரு சில வீடியோக்களை பார்க்கும் போது மிகுந்த பதற்றமான மனநிலை ஏற்படுகிறது. ஏனென்றால் இவர்கள் விமானம் ஏறும் போது கூட அங்கு ட்ரோன்கள் பறப்பதும், அவற்றை சுட்டு வீழ்த்துவதும் நடந்துள்ளது.
குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கச் சென்றவர்கள் இந்த சூழலில் மாட்டி இருந்துள்ளனர். இப்படி மோசமான அனுபவம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று கோவை நீதிமன்றத்தில் கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்காக உழைத்த காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.
குற்றவாளிகள் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஊடகங்கள் பெண்ணின் அடையாளம், புகைப்படம் மற்றும் தகவல்களை வெளியிடாமல் பத்திரிக்கை தர்மத்தை கடைபிடித்து அந்த நிகழ்வை சரியான விதத்தில் கையாள்ந்துள்ளன. இதற்காக கோவையில் உள்ள ஊடக நண்பர்களுக்கு எனது பாராட்டுகள்.
பாதிக்கப்பட்டவர்கள் ஏன் வெளியில் வந்து புகார் அளிக்கவில்லை என்றால், உடனடியாக அவர்களின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியே வந்துவிடும் என்ற பயம் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் இந்த வழக்கில் அந்த ரகசியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதற்காக உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
கோவையில் இந்த தீர்ப்பு வந்ததால் கோவை மீண்டும் ஒரு பாதுகாப்பான நகரமாக மாறிவிட்டது என்று கூற முடியாது. நேற்று கூட பார்சன் குடியிருப்பு பகுதியில் ஒரு முதிய பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ளார். முதியோர்களுக்கு பாதுகாப்பில்லாத இடமாக தமிழகத்தின் மேற்கு மண்டலம் மாறிவிட்டது.
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் என்று அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, பல்வேறு சமூக அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. திராவிட முன்னேற்ற கழக அரசு பெண்களுக்கு எதிரான அரசு. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தோல்வி அடைந்த அரசு என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.
த.வெ.க தலைவர் விஜய் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஒரு பவுன் தங்கம், பெண்களுக்கு ரூ.2,500, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போன்ற திட்டங்கள் மகளிருக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
சினிமாவில் பொங்கல் ஸ்பெஷல், தீபாவளி ஸ்பெஷல் போன்று மகளிர் தினம் ஸ்பெஷல் என்ற வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது வழக்கமான நடைமுறைதான்.
ஆனால் புதிதாக உருவான ஒரு அரசியல் கட்சி இந்த அளவிற்கு வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கிறது என்றால் நிச்சயமாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்று மக்கள் சந்தேகப்படுவார்கள்.
விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பார் என்று யாராவது நம்ப முடியுமா? ஒருவராலும் நம்ப முடியாது.
விஜய் கட்சி இன்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா? அரசாங்கத்தை அமைப்பார்களா? நிச்சயமாக இல்லை.
அப்படி இருக்கும்போது வாக்குறுதிகளை நாங்களும் வந்து தரலாம். அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் பெண்களுக்கு போட்டி போட்டு வாக்குறுதிகள் வழங்குவது ஒரு பெண்கள் தலைவியாக நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.



