கோவை: வீட்டு மாடியில் இரவு நேரத்தில் துணி துவைத்ததை தட்டிகேட்ட முதியவர்களை தாக்கிய இளம்பெண் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளி கந்தசாமி லே அவுட் பகுதியில் வாடகை வீட்டில் 3வது தளத்தில் வசித்து வருபவர் பட்டுராஜ் (70). இவர் ஒண்டிப்புதூரில் மளிகை கடை வைத்துள்ளார். வயது முதிர்வு காரணமாக கடந்த 3 மாதமாக கடைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவரது வீட்டின் தரைதளத்தில் மகாலட்சுமி (25) என்பவர் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகாலட்சுமி மொட்டை மாடியில் துணி துவைத்து கொண்டு இருந்தார். அந்த சத்தத்தை கேட்டு பட்டுராஜின் மனைவி மாடிக்கு சென்று மகாலட்சுமியிடம் ஏன் இரவு நேரத்தில் துணி துவைத்து கொண்டு இருக்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம ஏற்பட்டு உள்ளது.
அதில் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு பட்டுராஜ் மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு அவரது மனைவி கீழே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மாலட்சுமியை கண்டித்தார். அப்போது அவர், பட்டுராஜையும் தாக்கினார்.
சிறிது நேரத்தில் அடையாளம் தெரியாத 2 பேர் மொட்டை மாடிக்கு வந்து மகாலட்சுமிக்கு ஆதரவாக பேசி பட்டுராஜை தாக்கினர். பலத்த காயம் அடைந்த கணவன், மனைவி இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து பட்டுராஜ் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மகாலட்சுமி மற்றும் அவரது நண்பர்கள் அடையாளம் தெரியாத 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Elderly couple attack

