கோவை: தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருமண மண்டப உரிமையாளர்கள் பேனர் அச்சகங்கள் சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், பேனர் பிளக்ஸ் அச்சகங்கள் ஆகிய சங்கத்தினர்கள் பின்பற்ற வேண்டிய சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பவன்குமார் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், துணை இயக்குநர் (கலால்) முருகேசன் திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கங்கள் அச்சகத்தினர் சங்கங்கள், பேனர் பிளக்ஸ் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது, சட்டமன்ற பொது தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள் தங்கள் அச்சடிக்கும் நோட்டீஸ் பேனர்களில் தங்களது அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி அச்சிட வேண்டும்.
வேட்பாளர் விளம்பரத்திற்கு அரசிடம் முன் அனுமதி பெற்றுள்ளாரா என்பதனை உறுதி செய்ய வேண்டும். திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபத்தை பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்கிட பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது. மேலும், வேட்பாளர்கள் மண்டபத்திற்கு செலுத்திய வாடகை தொகை விவரத்தை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
திருமணம், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்யக்கூடாது என தெரிவித்தார்.

